இந்தப் புத்தகம் வேதாகமப் போதனைகளுக்காகவோ அல்லது வேதாகம உபதேசமாகவோ பின்பற்றப்படக் கூடாது என்பதை நான் வெளிப்படையாகவும் தாழ்மையாகவும் கூற விரும்புகிறேன். இது விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக மட்டுமே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு மோசஸ் சாமுவேலின் (Moses Samuel) ஆங்கிலப் பதிப்பைப் பயன்படுத்திச் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு தலைசிறந்தது என்று பல எபிரெய மொழி வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களில் சிலர்: ரபி எச். வி. நாதன் (Rabbi H. V. Nathan), பேராசிரியர் சாமுவேல் எச். டர்னர் (Professor Samuel H. Turner), பேராசிரியர் ஜார்ஜ் புஷ் (Professor George Bush), பேராசிரியர் ஐசக் நார்ட்ஹெய்மர் (Professor Isaac Nordheimer).
இதன் மூல உரையானது வேதாகம மரபுத்தொடர்களின் கலவையுடன் "ரபிமார்களின் எபிரெய" (Rabbinical Hebrew) மொழியில் எழுதப்பட்டுள்ளது என்று பேராசிரியர் டர்னரும், பேராசிரியர் புஷ்சும் குறிப்பாகச் சுட்டிக்காட்டினர்.
மூல எபிரெயப் புத்தகத்தின் பெயர் செஃபர் ஹாயாஷார் (Sefer haYashar / ספר הישר). இது "நேர்மையானவரின் புஸ்தகம்" அல்லது "யாசேரின் புஸ்தகம்" என மொழிபெயர்க்கப்படுகிறது.வேதாகமத்தில் யோசுவா 10:13 மற்றும் 2 சாமுவேல் 1:18 ஆகிய இரண்டு இடங்களில் இந்தப் புத்தகம் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மூல எபிரெயப் புத்தகத்தின் ஆசிரியர் இன்னும் அடையாளம் தெரியாத நபராகவே உள்ளார்.