பழங்கால தமிழர்களின் மிக முக்கிய உணவுகளாக சாமை, வரகு, ராகி, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் இருந்தன. இன்றும் கிராமப்புறங்களிலுள்ள மக்கள் இவற்றை ‘பசிதாங்கி’ உணவு எனக்கருதி உண்டு வருகின்றனர். சிறிய விதைகளைக் கொண்ட புல்வகை தாவரங்களான சிறுதானியங்கள் மானாவாரியாகப் பயிரிட ஏற்றவை. குறைந்த வயதுடைய இப்பயிர்கள் கடினமான காலநிலைகளையும், சத்து குறைவான மண் வகைகளையும், பூச்சி நோய்த் தாக்குதலையும் தாங்கி வாழும் தன்மையுடையது.
ஊட்டச் சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் சிறுதானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஸ்னாக்ஸ், ஸ்வீட்ஸ் அயிட்டங்கள் அனைத்தும் வர்த்தக தந்திரங்களோடு தயாரிக்கப்படுபவை. ஆனால் நொறுக்குத் தீனியாக பயன்படும் சிறுதானிய உணவுகளை நாமே தயாரித்து உண்பது நன்மை பயக்கும். இத்தகைய சமையல் தயாரிப்புகளுக்கு வழிகாட்டுகிறது இந்த புத்தகம். சிறுதானிய சிற்றுண்டிகளை சிறுவர்களும் பெரியவர்களும் முகம் சுழிக்காமல் ருசித்து சாப்பிடுவதற்கு சமையல் குறிப்புகளை உள்ளடக்கியது இந்நூல்.