அங்கிங் கென்னாதபடி எங்கும் நிறைந்த இறைவன் மண்ணைப் படைத்தார். விண்ணைப் படைத்தார், அவற்றை ஆண்டு கொள்ள மனிதனைப் படைத்தார். இயற்கையை அனுபவிக்க வேண்டுமே தவிர, அதை அழித்துவிடக் கூடாது. மனித குலம் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படும் உணவு, தண்ணீர், காற்று போன்றவை தற்போது மாசுபட்டு மனித வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு காலத்தில் நமது முன்னோர்கள் கிராமங்களில் ஆரோக்கியமாக 120 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர். சிலர் அதற்கு அதிகமாகவும் வாழ்ந்துள்ளனர். இந்த மனித வாழ்வுக்கு சூனியம் வைக்கும் விதத்தில் சுற்றுச்சூழல் கெட்டுக்கிடக்கிறது. மனித இனத்தைக் காப்போம் என்னும் கூக்குரல் உலகெங்கும் ஒலித்துகொண்டிருக்கிறது. மனிதகுலம் தழைக்க வேண்டுமானால் மண்வளம் பெருக வேண்டும்.
சுற்றுச்சூழல் சமநிலை உலகெங்கும் நிலவ வேண்டியதின் அவசியம் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. பச்சை ஆன்மீகம் பாரெங்கும் பரவினால் மட்டுமே நமது பாரத
தேசத்தைப் பாதுகாக்க முடியும். இதை மையப்படுத்தி, கிறிஸ்தவர்களின் புனித நூலாகிய
விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு, நூல் ஆசிரியர் தேசோபகாரி மாத இதழில்
எழுதிய பல்வேறு கட்டுரைகளைத் தொகுத்து பச்சை ஆன்மீகம் என்னும் சுற்றுச்சூழல்
நூலாக வெளியிட்டுள்ளார்.